Wednesday 5 February 2014

ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் தேர்ப்-க்கு மனஅழுத்த நோய்

கடந்த 2000-த்தில் நடைபெற்ற ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களையும், 2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் போட்டிகளில் ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்று ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற நீச்சல் வீரராக அறியப்பட்டவர் இயான் தோர்ப் (31). காமன்வெல்த் போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்களையும், 11 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார். ஆனால் பிரபலமான வாழ்க்கைமுறையும், தொடர்ந்த பயிற்சிகளும் அவரை 2006-ம் ஆண்டிலேயே தனது ஓய்வை அறிவிக்க வைத்தது. அதன்பின்னர் அவர் நகை வடிவமைப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நேரத்தை செலவிட்டார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் பங்கு பெற வந்த தோர்ப் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைய நேரிட்டது.

அந்த சமயங்களில்தான் அவர் மன அழுத்த நோய்க்கு ஆளானது வெளித்தெரிந்தது. அந்த சமயங்களில் வெளிவந்த அவரது சுயசரிதையில் குடிப்பழக்கத்துடன் தனக்கு நேர்ந்த போராட்டம் குறித்தும் அவர் விவரித்திருந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் கீழே விழ நேர்ந்ததில் தோள்பட்டையில் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோர்ப் மனஅழுத்தத்திற்காகவும், மதுப் பழக்கத்திற்காகவும் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதாக செய்திகள் பரவ அவருடைய மேலாளர் அதனை மறுத்திருந்தார்.

மீண்டும் நேற்று அதிகாலை சிட்னி வீதி ஒன்றில் தனது பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே தன் நண்பருடைய கார் என்று நினைத்துக்கொண்டு தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் ஏற இயான் தோர்ப் முயற்சித்துக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தெரிவிக்க அவர்கள் தோர்ப்பை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

தோள்பட்டை சிகிச்சைக்கான மருந்துகளையும், மன அழுத்தத்திற்கான மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிட்டுவருவதில் அவர் நிலை தடுமாறி உள்ளார் என்று அவரது தந்தை குறிப்பிட்டார். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி தோர்ப் மறுவாழ்வு சிகிச்சைமையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் பூரண குணம் பெறுவார் என்றும் அவரது தந்தை நம்பிக்கை தெரிவித்தார்.

1 comment: